கியூபா பற்றிய விளக்கமான ஒரு வரலாறு..

  • கியூபா அமெரிக்க நாட்டிற்கு மிக அருகில் இருக்கும் ஒரு அழகிய குட்டித் தீவு நாடு. இந்தியாவிற்கு மிக அருகில் இலங்கை இருப்பதுபோல். அமெரிக்காவின் தென் கோடியிலிருந்து கியூபாவின் வட கோடிக்கு 90 மைல் கடல் தான்.
  • கிறிஸ்டோபர் கொலம்பஸ் இந்தியாவுக்கு வழி கண்டுப்பிடிக்கிறேன்னு கிளம்பி கியூபாவில் 1492இல் வந்திறங்கினார். போப்பாண்டவர் இத்தீவில் வாழும் டைனோ இன மக்களை கத்தோலிக்க கிறிஸ்துவராக மாற்ற, மற்றும் ஆட்சி செய்ய ஸ்பெயினுக்கு அனுமதி கொடுத்ததால், "இது ஸ்பெயின் பேரரசின் காலனி" என்று சில வருடங்களில் மாற்றிவிட்டனர்.
  • ஸ்பெயின் நாட்டு மக்களை கியூபாவின் டைனோ மக்கள் எதிர்த்தாலும், ஸ்பெயினிலிருந்து வந்த பெரியம்மை போன்ற நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி இல்லாததால் பல லட்சக்கணக்கான மக்களாக வாழ்ந்து வந்த டைனோ மக்கள் வெறும் 500 பேராக குறைந்துவிட்டனர். மேலும் ஸ்பெயின் பேரரசு டைனோ மக்களை சண்டையிட்டுத் தோற்கடித்தது. ஒண்ட வந்தப் பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதுபோல்.
  • ஸ்பெயின் கியூபாவிற்கு கருப்பர் இன மக்களை அடிமைகளாக கொண்டுவந்து கரும்பு விவசாயம் செய்தது. பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் மூன்று பேரரசுகளும் அங்குள்ள தீவுகளை (ஜமைக்கா, ஹெய்டி போல) அவ்வப்போது கைப்பற்றி, ஒருவருக்கொருவர் சண்டைகள் போட்டு கை மாற்றிக் கொண்டார்கள். இறுதியில் கியூபா ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் இருந்தது.
  • பிரிட்டன் அமெரிக்காவில் 13 காலனிகளை நிறுவியது. 1783இல் அமெரிக்க நாடு பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றது.
  • 1898இல் ஸ்பெயின் பேரரசிற்கும் அமெரிக்க நாட்டிற்குமிடையே போர் மூண்டது. அமெரிக்கா போரில் எளிதாக வென்றது. அப்போது ஸ்பெயினுக்கு பேஸ்மென்ட் ரொம்பவே வீக்.
  • அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ஆட்சியாளர்கள் கியூபா நாட்டின் தலைமை பதவிக்கு வந்தனர். கியூபாவின் பொருளாதாரம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அமெரிக்காவிற்கு சாதமாக வர்த்தகம் நடந்து வந்தது.
  • 1940இல் ஃபுல்ஜென்சியோ படிஸ்டா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த தேர்தல்களில் வேறு சில ஜனாதிபதிகள் வந்து போனாலும் 1952இல் படிஸ்டா மீண்டும் ஜனாதிபதியார்.
  • பிடல் காஸ்ட்ரோ என்ற ஒரு 33 வயது இளைஞன் படிஸ்டாவின் ஆட்சி ஊழலை எதிர்த்துப் போராடினார். 26 ஜூலை 1953இல் மோன்காடோ என்ற ஒரு இராணுவ கொட்டகையை (Moncado barracks) சிலருடன் சேர்ந்து தாக்கினார். இராணுவம் காஸ்ட்ரோ மற்றும் அவர் கூட்டாளிகளை மிக எளிதில் தோற்கடித்து கைது செய்தது. காஸ்ட்ரோ மற்றும் அவர் நண்பர்கள் சிறையிலடைக்கப் பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். பிடல் காஸ்ட்ரோவின் தம்பி ராவுல் காஸ்ட்ரோவும் அவரோடு சேர்ந்தே இருந்தார்.
  • காஸ்ட்ரோ மனம் வெதும்பி மெக்ஸிகோ நாட்டிற்கு சென்றார். அங்கு அர்ஜென்டினாவை சேர்ந்த எர்னஸ்டோ சே குவேரா என்ற மருத்துவம் படித்த இளைஞனை சந்தித்தார். அவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டு கியூபா மீது மீண்டும் படையெடுக்க முடிவு செய்தனர்.
  • 1956இல் Granma என்ற ஒரு சிறு கப்பலில் தன் தம்பி ராவுல் காஸ்ட்ரோ, எர்னஸ்டோ சே குவேராவுடன் சேர்ந்து 82 பேருடன் கியூபாவை கடல் மார்க்கமாக தாக்கினர். மீண்டும் படிஸ்டாவின் படைகள் காஸ்ட்ரோ மற்றும் அவர் கூட்டாளிகளை எளிதில் தோற்கடித்தது. ஆனால் பிடல், ராவுல் காஸ்ட்ரோ, எர்னஸ்டோ சே குவேராவுடன் சேர்ந்து 12 பேர் தப்பி அருகிலுள்ள சியரா மாஸ்ட்ரா என்ற மலைப் பகுதிக்குள் தஞ்சம் புகுந்தனர். அங்கிருந்து கொரில்லாப் போராட்டம் நிகழ்த்தினர்.
  • 1959இல் பிடல் காஸ்ட்ரோவின் படைகள் படிஸ்டாவின் ராணுவத்தை வென்றது. பிடல் மற்றும் நண்பர்கள் வெற்றிகரமாக கியூபாவின் தலைநகருக்குள் நுழைந்தனர். படிஸ்டா ஸ்பெயின் நாட்டில் தஞ்சமடைந்தார்.
  • சில ஜனாதிபதிகள் வந்து போனாலும் 1976இல் பிடல் காஸ்ட்ரோ ஜனாதிபதியானார். 2008 வரை அவரே சர்வாதிகார ஜனாதிபதியாக இருந்தார். அவரிடம் சில காலம் மந்திரியாக இருந்த சே குவேரா பின்னர் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று அமெரிக்கா ஆதரவு படைகளுக்கு எதிராக போர் செய்து 1967இல் உயிரிழந்தார். உலகில் பலராலும் சர்வதேச போராளி என்ற போற்றப்படுபவர் எர்னஸ்டோ சே குவேரா.
  • பிடல் காஸ்ட்ரோ கம்யூனிஸ்ட் ஆட்சி முறை செய்தார். அமெரிக்காவின் எதிரியான சோவியத் யூனியனுக்கு காஸ்ட்ரோ நெருங்கிய நண்பரானார். அவர் ஆட்சிக்கு வந்தபின் அமெரிக்காவுக்கு சாதகமாக இருந்த அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்து கியூபாவிலிருந்த அமெரிக்க நிறுவனங்களை தேசியமயமாக்கினார். அதனால் அமெரிக்கா அவரை ஜென்ம விரோதியாக பார்த்தது.
  • 1961இல் அமெரிக்காவின் கென்னடி அரசு CIA தலைமையில் Bay of Pigs என்ற ஒரு தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் ராணுவம் இதில் பங்கேற்கவில்லை. இத்தாக்குதல் சொதப்பலாக நடந்து, தோல்வியில் முடிந்து, காஸ்ட்ரோ தப்பினார்.
  • இந்த தாக்குதலால் மிகவும் காண்டான காஸ்ட்ரோ, சோவியத் யூனியனின் அணு ஆயுதங்களை ரகசியமாக வைத்தார். கென்னெடியின் அரசு செயற்கை கோள்களின் உதவியால் இதை கண்டுபிடித்துவிட்டன.
  • சோவியத் யூனியன் மீது இதனால் மரண காண்டான அமெரிக்கா, "இந்த அணு ஆயுதங்களை வெளியேற்றுகிறீர்களா இல்லை உலகப் போரை துவக்கலாமா" என்று மிரட்டியது. அப்போது உலகப்போரை விரும்பாத சோவியத் யூனியன் அணு ஆயுதங்களை வெளியேற்றின. காஸ்ட்ரோவின் அமெரிக்கா எதிர் நிலைமை தீவிரம் அடைந்து தொடர்ந்தது. சோவியத் யூனியன் 1991இல் நொறுங்கியபின் கியூபாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலை அடைந்தது.
  • 2008இல் உடல் நிலை குன்றிய பிடல் காஸ்ட்ரோ ஜனாதிபதி பதவியை தம்பி ராவுல் காஸ்ட்ரோவிடம் கொடுத்தார். 2011இல் 85 வயதில் பிடல் காஸ்ட்ரோ உடல் நலம் குன்றி இறந்தார்.
  • ராவுல் காஸ்ட்ரோவும் சில வருடங்கள் கழித்து வயது காரணமாக ஜனாதிபதி பதவியை மிகேல் டைஸ் கனால் என்றவரிடம் கொடுத்தார். ராவுல் காஸ்ட்ரோ முதல் காரியதரிசி என்ற பதவியில் தொடர்ந்து இன்றும் இருக்கிறார். இப்போதும் கியூபாவின் அதிகாரம் ராவுல் காஸ்ட்ரோவிடமே உள்ளது.
  • கம்யூனிஸ்ட் ஆட்சி கியூபாவின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்து விட்டது. அதனால் கியூபாவிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு கள்ளத்தோணி மூலம் தப்பிச் சென்றனர். பிடல் காஸ்ட்ரோ ஆட்சியில் கியூபாவில் நிறைய மருத்துவர்கள் உருவாக்கப்பட்டு அந்நாட்டில் மருத்துவ சேவை மிக நன்றாக உள்ளது. ஆனால் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. ஒபாமா ஆட்சியின் பொது அமெரிக்கா-கியூபா உறவு மெதுவாக முன்னேற்றத் தொடங்கியது. டிரம்ப் ஆட்சியில் அந்த முன்னேற்றம் மீண்டும் குறைந்தது. ஆனால் முன்பிருந்த அமெரிக்கா-கியூபா விரோதம் இப்போது இல்லை.

Post a Comment

Previous Post Next Post